Saturday, December 20, 2008

பழுத்த இலைகள்

பன்னீர் மரங்கள் இரண்டு
பழுக்கத் துவங்கிய மாமரமொன்று
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு.
பூச்செடிகள் வளர்க்க
அப்பாவின் விருப்பம்.
புதிதாய் ஒரு ரோஜாச் செடி
பதியன் போட்டிருப்பதாய்
குதியாட்டம் போட்டான் தம்பி.
தம்பி ஒருமுறை
அம்மா ஒருமுறை
தண்ணீர் ஊற்றிவர
அப்பா சென்று ஒருமுறை
அன்பை ஊற்றி வருவார்.
மலரும் முன்பே
ரோஜாவின் புராணம்
மணம் வீசத் துவங்கியது
வீடு முழுவதும்.
ஒருநாள் காலை
புழக்கடைப் பக்கம்
புழங்கியபோது கண்டேன்
வளர்ந்து விட்டிருந்த செடியில்
குழந்தையின் சிரிப்பாக
இளஞ்சிவப்பு ரோஜா.
பல நாட்களாய்
என் தோட்டத்தில்
வளர்ந்து வந்த செடியில்
பழுத்த இலைகளும்
உதிர்ந்திருக்கலாம்
பார்த்ததில்லை நான்
அப்போது.

(C) karthikaneya@gmail.com

2 comments:

'))')) said...

//பழுத்த இலைகளும்
உதிர்ந்திருக்கலாம்
பார்த்ததில்லை நான்
அப்போது.//

பழுத்த இலைகள யாரும் கவனிப்பதில்லைதான் கார்த்திகா.
நிஜ வாழ்விலும்தான்.
அன்புடன் அருணா

'))')) said...

நல்ல இருக்கு. உங்க பழைய பதிவு கவிதைகளையும் படித்தேன்.மலையின் அழைப்பு/ஏன் அப்படி அருமை. மரபு வாசனையும் மேலோட்டமாக கறிவேப்பிலைத் தூவினாற் போல் வருகிறது. கவித்துவம் இருக்கு.

வாங்க நம்ம வலைக்கு.என் கவிதைகளின் மேல் உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மேலும் கதை/கட்டுரையும் உண்டு.