Sunday, October 05, 2008

சிறகுகள்

சிறைக்கூரைமேல்
இளைப்பாறுகின்றன
சில புறாக்கள்.

நிலவு ஏமாந்த நேரத்தில்...

வீடுகள்தோறும்
நட்சத்திரங்களை
அழைத்துவந்தது
மின்சாரம் தடைப்பட்ட இரவு.

நானும் நானும்

வெயில் மிதக்கும்
மூங்கில் காடுகளின்
துளைகளுக்குள்
புகுந்து புகுந்து புறப்படும்
ஒற்றைக்குயில் பாடும் ராகம்.
பகல் முழுவதும்
பாடலில் லயித்த சூரியன்
கூடு திரும்பும் வேளையில்
ஒற்றைககுயிலுக்குத் துணை நான்தானோ?
ஒற்றைக்குயிலே நான்தானோ?

Thursday, October 02, 2008

மனம் காட்டும் கண்ணாடி

சூரியத் துணுக்குகள்
மோத மோத
இசையெழுப்பி
நடக்கும் நதி.

நதியின் இசை
நாணலுக்குத் தாலாட்டு.

தாலாட்டில் கலையாது
தவமிருக்கும் நந்தவனம்.

நந்தவனங்கள் வழியே
உனை அடையும் பாதை.

பாதை எங்கும் பார்த்தேன்
பூவிதழ்களில் கண்ணீர்த் துளி.
நீ பாராமல் நடந்தாயாம்.

நடந்து சென்ற உன்
தோள்களின் மேல்
இரு சிறகுகள் இருந்ததாய்
ஒரு தேவதைக் கற்பனை.

கற்பனையின் கதவுகள்
கண்கள் வழி திறக்கின்றன;
பேனாவின் ஊற்றுக்கண்கள் வழி.

எழுதியபின் பார்த்தேன்.
கற்பனையின் பிம்பங்கள்
காகிதக் கண்ணாடியில்.

நான் மனம் பார்க்கும்
கண்ணாடி நீதான்.
என் மனதைக் காட்ட
என்னையே பூசாதே
பாதரசமாய்.

நேரம் சரியாக...

வீட்டின் அறைகள் யாவற்றிலும்
கடிகாரம் இருப்பது பெருமைதான்
நேற்று முன்தினம் வரை.
நேற்று முற்பகலில்
பாத்திரம் ஒன்றை அடுப்பிலேற்றி
பத்து நிமிடத்தில் இறக்கும்
பணி கிட்டியது. (உபயம்: தமக்கை)
சமையலறையில்
சரியான நேரம் பார்த்து விட்டு
கூடத்துக்கு வந்தேன்.
குழம்பிப் போனேன்.
மூன்று நிமிடம்
முன்னே சென்றது
கூடத்துக் கடிகாரம்.
சமையலறை, கூடம் என
மாற்றி மாற்றி மணி பார்த்து,
தலைசுற்றிப் போய்
தாழ்வாரம் வந்து
தாம்புக் கயிற்றில் தொங்கும்
ஊஞ்சலில் சாய்ந்தேன்.
தாழ்வாரத்துத் தலையாட்டும் கடிகாரமோ
தயங்கித் தயங்கித்
தலையசைத்து ஐந்து நிமிடம்
தாமதமாய்ச் சென்றது.
சரியான நேரமெனைச்
சனி போல் பின்தொடர
படுக்கையறைக்குள் சென்றேன்.
பல்லிளித்தவாறே
பத்து நிமிடம் முன்னே
பாய்ந்து சென்றது
கோமாளிக் கடிகாரம்.
சரியான நேரத்தைச்
சரி செய்யும் என் ஆய்வில்
முடிவு கண்டேன்
காய்கறியில் நீர் வற்றித்
தீயும் மணம் வந்தபோது.
'நேரம் சரியாக இப்போது' என்று
சொல்லிமுடிக்கப்படும் நேரம் ஒன்று
இல்லை இல்லை எப்போதும்.

மொட்டைமாடி விளையாட்டு

கொஞ்ச நேரம் உலாவச் செல்கையில்
கோபித்துக் கொண்ட குழந்தை போல்
மௌனித்து இருக்கும்
மரங்களின் இலைகளிலே.
பார்த்திருந்து அலுத்துவிட்டு
படியிறங்கப் போகையிலோ
கொஞ்சித் தோள் தொட்டுக்
கூப்பிட்டு - என்னை
அல்லாடவிடும் இந்தப்
பொல்லாத தென்றல்.