Saturday, December 20, 2008

வெயில் வாசனை

மேகங்கள் உலர்ந்து கொண்டிருக்கும்
மழைக்குப் பிந்தைய நாளின்
இளங்கதிரில்...
மரக்கிளைகளில் ஊடுருவும்
முதல் கீற்றில் மிதக்கும்
தூசுகளில்...
துவைத்து உலர்த்திய
ஆடைகளின் தூய
நூலிழைகளில்...
மதிய நேர மைதான
விளையாட்டின்பின்
முழங்கால் புழுதியில்...
மாலை நேரத்து
வாயில்களெங்கும்
நீர் தெளிக்கப்படுகையில்...
எழுகின்ற வெயிலின் வாசம்
எழுந்து கொண்டிருந்தது
வீட்டு வாசலில்
விழுந்து கிடந்த
காய்ந்த சருகினின்றும்.

(C) karthikaneya@gmail.com