Saturday, December 27, 2008

கனவில் வந்த தூக்கம்

எப்போதும் துயிலும்
என் அறையில்தான்
நேற்றும் துயின்றபோது
என் மென்கனவில் வந்தது
நான் எப்போதும் துயிலும் அறை.
என் தூக்கம் கனவா, நிஜமா?
குழப்பம் தெளியாது
தூங்க முயற்சித்தேன்
இன்னும் கொஞ்சம்.


(C) karthikaneya@gmail.com

பகல்நிலவு

நிலவைப் போல்
நிலவைப் போல்
நடிக்க முயன்று
தோற்கிறது
மழை நாள் சூரியன்.


(C) karthikaneya@gmail.com

Saturday, December 20, 2008

மலையின் அழைப்பு

அதிகாலை வெயிலில்
இளமஞ்சள் பூசிநிற்கும் மலை
அழகாய் எனை மயக்கி
அழைக்கும்.
எழிலான பாதைகளை
ஒயிலான வளைவுகளை
இருபுறமும் ஓடைகளை
இளைப்பாற சோலைகளை
எனை நோக்கி வீசி
எப்போதும் அழைக்கும்.
அகல விரிந்த தோள்களில்
முகில்கள் துஞ்சும் மடியினில்
வெயிலில் ஜொலிக்கும் கணப்பினில்
சாரல் கொஞ்சும் நாட்களில்
அப்பாவை, அம்மாவை,
சகோதரர், தோழர்களை
நினைவூட்டி மயக்கி
எனை அழைத்தவாறு இருக்கும் - மலை
மாலை நெருங்கி
இருள் கவியும் பொழுதுகளில்
விழிகள் கனல
இருட்டில் உலவும்
புலிபோல் தோற்றும்.
பகலெல்லாம் நீள நடந்தும்
ஒவ்வொரு இரவிலும்
தோற்றுப்போய் மீளும்
என் பயணங்களை
வெவ்வேறு விழிகளில்
பார்த்தவாறே உள்ளது
மலைப்புலி.
மலைக்கும் உண்டு
சில விழிகளும்
ஒரே இரவும்.

(C) karthikaneya@gmail.com

வெயில் வாசனை

மேகங்கள் உலர்ந்து கொண்டிருக்கும்
மழைக்குப் பிந்தைய நாளின்
இளங்கதிரில்...
மரக்கிளைகளில் ஊடுருவும்
முதல் கீற்றில் மிதக்கும்
தூசுகளில்...
துவைத்து உலர்த்திய
ஆடைகளின் தூய
நூலிழைகளில்...
மதிய நேர மைதான
விளையாட்டின்பின்
முழங்கால் புழுதியில்...
மாலை நேரத்து
வாயில்களெங்கும்
நீர் தெளிக்கப்படுகையில்...
எழுகின்ற வெயிலின் வாசம்
எழுந்து கொண்டிருந்தது
வீட்டு வாசலில்
விழுந்து கிடந்த
காய்ந்த சருகினின்றும்.

(C) karthikaneya@gmail.com

பழுத்த இலைகள்

பன்னீர் மரங்கள் இரண்டு
பழுக்கத் துவங்கிய மாமரமொன்று
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு.
பூச்செடிகள் வளர்க்க
அப்பாவின் விருப்பம்.
புதிதாய் ஒரு ரோஜாச் செடி
பதியன் போட்டிருப்பதாய்
குதியாட்டம் போட்டான் தம்பி.
தம்பி ஒருமுறை
அம்மா ஒருமுறை
தண்ணீர் ஊற்றிவர
அப்பா சென்று ஒருமுறை
அன்பை ஊற்றி வருவார்.
மலரும் முன்பே
ரோஜாவின் புராணம்
மணம் வீசத் துவங்கியது
வீடு முழுவதும்.
ஒருநாள் காலை
புழக்கடைப் பக்கம்
புழங்கியபோது கண்டேன்
வளர்ந்து விட்டிருந்த செடியில்
குழந்தையின் சிரிப்பாக
இளஞ்சிவப்பு ரோஜா.
பல நாட்களாய்
என் தோட்டத்தில்
வளர்ந்து வந்த செடியில்
பழுத்த இலைகளும்
உதிர்ந்திருக்கலாம்
பார்த்ததில்லை நான்
அப்போது.

(C) karthikaneya@gmail.com

பாவம் என் தனிமை

வெற்றுத் தரையில்
வெயிலைக் குறிவைத்து
மொட்டை மாடியில்
இறங்கின சில புறாக்கள்.
நான் விசிறிப்போட்ட
நினைவுகளை - அவை
கொத்தத் துவங்கியபோது
குருதி வழிய
விலகிச் சென்றது
என் தனிமை.

(C) karthikaneya@gmail.com

Wednesday, December 17, 2008

ஏன் அப்படி?

ஒவ்வொரு முறை
ஊர் திரும்பும்போதும்
வெகு தொலைவு
நகர்ந்திருக்கிறது
எப்போதும்
அங்கேயே இருக்கும்
என் ஊர்.

Wednesday, December 10, 2008

மிகச் சிறிய மாற்றம்

நெடுநாள் கழிந்து
சென்றபோதும்
நேற்றுதான்
பார்த்தது போல்
இருந்தது
எனது ஊர்.
எந்த மாற்றமும் இல்லாமல்
எல்லாரும்
எல்லாமும்.
பறவைகள்
மனிதர்கள்
பாதைகள்
நதி
உதயம்
அஸ்தமனம்.
ஒன்றும் பெரிய மாற்றமில்லை
சாலைகள் கொஞ்சம்
கருத்திருந்தன
மலைகள் கொஞ்சம்
மெலிந்திருந்தன
என்பதைத் தவிர.

(c) karthikaneya@gmail.com

மலர்த்துளிகள்

மலர்கள் அனைத்தையும்
சிந்தச் செய்து
சென்றது மழை.
கொஞ்சமும் கோபமின்றி
மரங்கள் இப்போது
சிந்திக் கொண்டிருக்கின்றன
மழைத் துளிகளை.