Friday, June 27, 2008
தரப்படும் <=> அன்பு <=> பெறப்படும்
திருப்பித் தரப்படும்.
அளிக்கப்பட்ட விட்டுத்தரல்கள்
அங்கீகரிக்கப்படும்.
கோரப்பட்ட மன்னிப்புகள்
ஏற்றுக்கொள்ளப்படும்.
அளிக்கப்பட்ட மன்னிப்புகள்
மதிக்கப்படும்.
காயப்பட்ட மனங்கள்
நேசிக்கப்படும்.
சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகள்
புரிந்துகொள்ளப்படும்.
Tuesday, June 24, 2008
மழை நாளில் உலா வந்த காற்று
உலர்ந்து கொண்டிருந்தது
கல் இருக்கைகளில்
உலாத்தியவாறு காற்று.
மீண்டும் வரும் கோடை
குழந்தைகள் சிறப்பு இரயில்களாய்த் தோன்றும்.
விடுமுறை முடிந்தபின் இரயில்கள்
வெறிச்சோடிப் போய்விடுகின்றன
கல்லூரி மாணவர்களின்
கலகலப்பு மிச்சமிருந்தும்.
முன்னறிவிப்பின்றி
நடுவே கிடந்தது
உணவுப் பொட்டலம்.
முன்னறிவிப்பின்றி வந்தது
எறும்பு ரயில் வண்டி ஒன்று.
Saturday, June 14, 2008
உயிர்களிடத்து அன்பு
வெயில் தகிக்கும் சாலையில் உயிர் விடுவதை
விரையும் வாகனங்களுக்குப் பயந்து
வீதியோரம் நின்று மௌன சாட்சியாக
நான் பார்த்த அன்று
கனவில் வந்து விட்டுப் போனார்
முறுக்கிய மீசையோடு சிரித்தவாறு பாரதி.
நீயும் வா நிலா
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.
ஒரு துளியின் பல மழைகள்
தங்கி நிற்கும் ஒரு துளி
நினைவூட்டி விடுகிறது
தவற விட்ட எல்லா மழையையும்.
Friday, June 13, 2008
"விரைவுப் பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கிறது
ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்."
விஜய் @ vettivambu said, "ஆஹா நெல்லைச்சீமையிலிருந்து ஒரு வலைப்பதிவாளரா? மிக்க மகிழ்ச்சி. இதென்ன ஹை-கூ கவிதை ரகமா?".
இந்த கவிதை ஹைக்கூ அல்ல. ஒரு அனுபவத்தை நமக்குத் தந்த நிகழ்வை மட்டும் வெளிப்படுத்துவது தான் ஹைக்கூ. "வாசகனின் மனமாகிய குளத்தில் கல்லை எறியும் ஒரு கவிஞனின் முயற்சி ஹைக்கூ. கல்லை எறிவது தான் கவிஞனின் வேலை. அதன் பின் எழும் அலைகளையும் அவனே வரைந்து கொண்டிருக்கக் கூடாது. அதை வாசகனின் சுதந்திரத்துக்கு விட்டு விட வேண்டும் ". இதுவே ஹைக்கூவின் அடிப்படைப் பண்பு. மற்றபடி மூன்று அடிகளில் இருக்க வேண்டும். ஐந்து, ஏழு, ஐந்து அசைகளில் அமைக்க வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் கூட நவீன ஹைக்கூவில் தளர்த்தப் பட்டுவிட்டன. எனவே இந்த "முன் செல்லும் இதயம்" கவிதையை இப்படி ஹைக்கூவாக மாற்றலாம்.
பயணம்
விரைவுப் பேருந்தின் முன்
பறந்து கொண்டிருக்கின்றது
பட்டாம்பூச்சி.
இது ஹைக்கூவாக இருக்கலாம் என்று நம்புகிறேன் . தெரிந்தவர்கள் சொல்லலாம்.
Monday, June 09, 2008
முன் செல்லும் இதயம்
பறந்து கொண்டிருக்கின்றது
ஒரு பட்டாம்பூச்சி.
பட படப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்.
Wednesday, June 04, 2008
இதற்கும் வேண்டுமா தலைப்பு?
ஊரார் அழைக்கத் தான்.
உன்னுடைய குழந்தை உனக்கெப்போதும்
உன்னுடைய குழந்தைதானே.
என்னுடைய கவிதைக்கும் பெயர் வேண்டுமென்றால
ஏதேனும் இட்டுக் கொள்.
என்னுடைய கவிதை எனக்கெப்போதும்
என்னுடைய கவிதையே தான்.