Tuesday, March 31, 2009

இரவுப் பறவையும், நானும், பிறையும்

"முதன்முதலாய் உன்னை
இப்போதுதான் பார்க்கிறேன்" என்றேன்
ஒரு மூன்றாம் பிறையிடம்.
"நானும் தான்" என்றது.
நான் பார்த்த பிறையைப்
பார்க்க வந்தமர்ந்தது ஓர் ஆந்தை.
அதையும் அப்போதுதான்
பார்க்கிறேன் என்றேன்.
"ஆமாம் நானும்" என்றது பிறையும்.

(C) karthikaneya@gmail.com

Saturday, March 21, 2009

பள்ளிக் கூண்டு


பால்மணம் வீசும் மேனியில்
பறவைக் கூண்டு வாசம் மெலிதாக
பள்ளி சென்று வந்த முதல் நாளில்.

(C) karthikaneya@gmail.com

Monday, March 09, 2009

கொடி ரோஜாக்கள்


ஓரிரு நாட்கள் பூக்கின்றன
இரண்டாம் மாடி பால்கனி தொட்டியில்
சிலவண்ண ரோஜாக்கள்.
முதல் மாடி பால்கனியில்
மலர்கின்றன அனுதினமும்
பலவண்ண ரோஜாக்கள்
இளம்தாய் உலர்த்தும்
சின்னஞ் சிறு உடைகளில்.

(C) karthikaneya@gmail.com

உன்னதம் கொன்று...


பகிர்ந்து கொள்ள
விரும்பிய தருணத்தைப்
பதிவு செய்ய,
பரிச்சயமற்ற
சொற்களின் தேடலில்,
மெல்ல
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
மொழிகள் எளிதில்
மொழிந்து விடமுடியாத
மென்கவிதை போன்ற
அவ்வுணர்வு.

(C) karthikaneya@gmail.com

மழை பெய்யாத மழை நாள்

கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.
(C) karthikaneya@gmail.com

இழையும் நட்பு

ஏதோ ஒரு தருணத்தை
நினைவில் வைக்க
இழைநூல் ஒன்றை
துண்டுகளாக்கி
பத்திரம் செய்தோம்.
எத்தனையோ
ஆண்டுகள் கழிந்தும்
எதற்காக என்ற
காரணம் மறந்தும்
இந்த மெல்லிழை
இறுக்கிப் பிணைக்கிறது
தொலைதூரம் விலகிச் சென்ற
தோழர்களையும்.

(C) karthikaneya@gmail.com

என் கோப நிலா


தற்செயலாய்
வானம் பார்க்க நேர்ந்த
மூன்றாம்பிறை நாளில்
என்னைக் கண்டதும்
தென்னங் கீற்றுகளின்
பின்னோடி - மேகத்தில்
முகம் மறைத்தபோதுதான்
நினைவெழுந்தது
'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.

(C) karthikaneya@gmail.com

Wednesday, March 04, 2009

ஒவ்வொன்றும் ஒன்றும்

ஒவ்வொரு துளியிலும்
மழை
என்னிடம்
ஒரே ஒரு குடை

(C) karthikaneya@gmail.com