Saturday, July 19, 2008

தற்செயல் தரிசனம்

மின்சாரம் மீளும் வரை
ரசிக்கப்பட்டிருந்தது
வீதியில் வீசிய
பௌர்ணமி நிலவு.

Monday, July 14, 2008

குட்டித் தவளை நினைத்தது

அதிகாலை எழுந்து பின்முற்றக் கதவைத்
திறந்த போது பார்த்தேன்.
அரையளவு நிரம்பிய சிவப்பு நிற வாளியில்
அழுக்குப் பச்சை நிறக் குட்டித் தவளை ஒன்று
அசைந்து கொண்டிருந்தது.
அவ்வளவு பெரிய வாளியில்
அது எப்படி விழுந்திருக்கக் கூடும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
எப்படி வெளியேறுவது என்று
நினைத்திருக்கக் கூடும் அக்குட்டித் தவளை
என்னை முறைத்த போது.

வழி நெடுக அம்மா அப்பா

பாதை எங்கிலும்
பயணங்களில் பார்க்கும்
மின்கடத்தும் கோபுரங்கள்
நினைவூட்டும்
குழந்தைகள் வரையும்
அம்மா அப்பா ஓவியங்களை.

Saturday, July 12, 2008

பாதைகள்

வெவ்வேறு காலணித் தடங்களின் கீழே
நசுங்கிக் கொண்டிருக்கும்
வெற்றுக் காலடிச் சுவடுகள்.

Monday, July 07, 2008

மென்பொருள் நிறுவனப் பணியில் சட்டையில் படியும் சன்னமான அழுக்கைத் துவைத்துப் போட அமைந்தவள்

(முன் வேண்டுகோள்: இது எனது நண்பன் ஒருவனுடைய கனவு. அதைக் கொஞ்சம் கவிதை நடையில் கற்பனை கலந்து சொல்லி இருக்கிறேன். எனவே மென்பொருள் நிறுவனப் பணி புரியும் நண்பர்கள் வன்பொருள்களைத் தேட வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.)

அடிக்கடி அருந்தும் வாழைப்பழ பால்கூழ் நிறத்தில்
ஆளை வசீகரிக்கும் அழகில்
இடை வரை நீண்ட கூந்தலோடு
ஈருடலும் இவனுயிருமாய் வாழும் நினைவோடு
உலக விடயங்கள் பேசும் ஞானத்தோடு
"ஊம்" மட்டும் சொல்லத் தெரிந்தவளாய்
எதையும் சகிக்கும் பொறுமையோடு
ஏனென்று கேள்வி கேட்காதவளாய்
ஐயத்திற்கு அப்பாற்பட்டவளாய்
ஒரு சுபமுகூர்த்த நாளில்
ஓம்படைக் கிளவியினூடே
ஔவை போலும் (அதை மறந்தேனே) கிடைத்தாள்
உனக்கொரு குலப் பெண்.

Sunday, July 06, 2008

நீல நிறக் கனவு

நிலைக் கண்ணாடி பிரதிபலித்த
நீல இரவு விளக்கின் ஒளியைக்
குறுக்கே கடந்த போது என்
நிழலைப் பார்த்தேன்.
பார்த்தவாறே சென்று படுக்கையில் துயின்றேன்.
என் நீல நிறக் கனவில் வந்தன
பல வண்ண நிலாக்கள்.

தீராத மழை

ஜன்னல் கம்பிகள்
செலவழிக்கின்றன
சற்றுமுன் சேமித்த மழையை.