Monday, April 26, 2010

தற்செயல் தவறுகள்

தற்செயலான ஒரு மழைத் திவலை போல்
பரிசுத்தமான
புன்னகையை,
நேயத்தை,
ஏக்கத்தை,
கண்ணீர்த் துளியை,
பிறப்பை,
இறப்பை,
பிரிவை,
முத்தத்தை,
கோபத்தை,
தியாகத்தை,
துரோகத்தை,
மன்னிப்பை…
மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின
பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே.

ஒரு எதிர்பார்ப்பில்
ஒரு காத்திருப்பில்
ஒரு அலட்சியத்தில்
ஒரு நிராகரிப்பில்
ஒரு புறக்கணிப்பில்
ஒரு போலச்செய்தலில்
புனிதத் தன்மையை இழந்துவிடுகின்றன யாவுமே…

முன்னரே உணர்ந்திருந்தால்
தவற விட்டிருப்பாயா…
உன் சொற்கள்
என்னை மகிழ்த்தியிருக்கக்கூடும்
ஒரு தருணத்தை..?

(C) karthikaneya@gmail.com

தொழில்நுட்பம்

தொழில்நுட்பப் பூங்காக்களின்
கண்ணாடிக் கட்டிடச் சுவர்களை
கயிற்றில் தொங்கிச் சுத்தம் செய்பவன்,
ஓவர்டைமில்
முகம்திருத்தி அனுப்பி வைக்கிறான்
வீடுதிரும்பும் சூரியனை.

(C) karthikaneya@gmail.com

ரகசிய வாசல்கள்

யாராரோ அறியக் கிடைத்தபின்னும்,
நான் நம்புதற்கில்லை
உன் ரகசியங்கள் ஏதும்
என்னிடத்தில் இருப்பதாய்.

தடயங்களை அழிப்பது வீண் வேலை.
உன் ரகசியத்தின் வாசல்கள்
பலவீனமானவை
எப்போதும் திறந்திருப்பவை.
அவற்றை என்னால்
காவல் செய்ய இயலாது.

அன்பு ஒன்றைத் தவிர
யாதொரு பயனுமில்லை
என் சொல்லிலும் செயலிலும்.

உள்ளே என்னை அனுமதிக்காதிருக்க
யோசிக்க சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன.
உன் உலகத்தில் எனக்கோர் இடம்
உனக்கெப்போதும் ஆபத்துதான்!

(C) karthikaneya@gmail.com