Saturday, November 15, 2008

அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்

தோள்களிலே எனைத் தூக்கி
'உப்புமூட்டை' என்றவர்கள்

சலிக்காமல் நாள்தோறும்
பல கதைகள் சொன்னவர்கள்

விளையாட்டில் வலிந்து சேர்த்து
தோற்கடித்துச் சிரித்தவர்கள்

முகம் சிவந்து அழுதபோது
முத்தமிட்டுத் தணித்தவர்கள்

கடற்கரையில் கைப்பிடித்து
அலையாடிக் கழித்தவர்கள்

ஏனென்றே தெரியாமல்
'யானை-பானை' என்றெல்லாம்

செல்லப் பெயரிட்டுச்
சீண்டி ரசித்தவர்கள்

இப்போது இயற்பெயரால் கூட
அழைப்பதில்லை என்னை.

என்ன செய்யக்கூடும்?
அண்ணன்களாகிவிட்டார்கள்
என் அண்ணன்கள்.

Wednesday, November 12, 2008

காரணமல்லாத காரணம்

உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை
'உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை'
என்பதைத் தவிர.

Tuesday, November 11, 2008

கனவில் திரியும் உயிர்

நீ சிந்திச் சென்றிருந்த
ஓரிரு அன்புச் சொற்களை
என் கனவு வெளியெங்கும்
கொத்தித் திரிந்தவாறு
இருக்கிறது உயிர்ப்பறவை இன்னும்.

Saturday, November 08, 2008

உலராத் துளிகள்

கொடிகளில்
காய்ந்துகொண்டிருக்கும்
மழைத் துளிகள்.
உடைகளை
உலர்த்த
காத்துக்கொண்டிருக்கிறேன்.


கோடை விளையாட்டு

வெயிலோடு
கண்ணாமூச்சி ஆடும்
வேப்ப நிழல்.

மழையல்ல, மழை!

எண்ணத் தொலையாத துளிகளில்
எனக்கான கவிதைகளை
ஏந்தி வரும் மழை.
நனைதலின் ஆனந்தத்தில்
நழுவவிட்ட அத்தனை துளிகளின் பின்
நகக்கண் ஓரம் நழுவி விடைபெறும்
ஒரு துளியைத் தக்க வைத்து
எழுதிடுவேன் ஒரு கவிதையேனும்.
என்றாலும் இயலாது
என் மழை அனுபவம் இயம்ப
எத்தனை கவிதைகளாலும்.