Monday, September 20, 2010
கலாப்ரியாவின் தாலாட்டு
நினைவின் தாழ்வாரங்கள் வாசித்தபடி சென்றேன்.
சொந்த ஊர் குறித்த
ஞாபக வீட்டின் கதவுகள்
திறந்துகொண்டன.
தமிழ்ச்சங்கம் தெருவான
சொக்கலிங்க முடுக்குத் தெருவில் இறங்கி
வளவுப் பிள்ளைகளோடு
தொட்டுப்பிடித்து விளையாடி
தோற்றுப் போன சடவு தீர
நினைவின் தாழ்வாரங்களில் தலை வைத்து
கனவின் தாழ்வாரங்களில் உறங்கத் தொடங்கினேன்.
மிச்ச பயணம் முழுதும்
எனைத் தாலாட்டிக் கொண்டு வந்தது
ரயிலோ கலாப்ரியாவோ
நானறியேன் புதுநகரே…
(c) karthikaneya@gmail.com
மலை என்கிற சூனியக்காரி
இயற்கையின் அன்பை
மொழிபெயர்த்துக்கொண்டிருந்த
மலையின் பாடலைக்
கேட்கப் போனேன் ஓர்நாள்.
அணைத்துக்கொள்ள தோள்களை விரித்திருந்த
மலையின் மடிகளும் கரங்களும்
எண்ணத் தொலையவில்லை.
தட்டாம் பூச்சியின் சிறகு வழி
வானம் பார்த்துக்கொண்டு போன என்னை
தாலாட்டித் தோளில் சாய்த்துக்கொண்ட மலையைக்
கட்டிக் கொள்ளப் பொங்கியது அன்பு - என்னைக்
கரைத்துக் கொண்டு.
தாய் மரத்தைக் கட்டிக் கொள்ள
ஆசைகொண்ட வேப்பம்பூவாய்
மலையின் நிழலில் நான்
மயங்கிக் கிடக்கிறேன் இப்போது.
(c) karthikaneya@gmail.com
மர மகள்
அதிகமாக வளரவேண்டுமென
ஆசை கொண்டிருந்தவள்
அடர்வனத்துள் ஓர்நாள்
வழிதவறித் தொலைந்துவிட்டாள்.
ஆகாயம் தொடும் விருட்சங்கள் கண்டு
அதிசயித்து நின்றவளை
அதன்பின் வளர்த்துவருகின்றன
அம்மரங்களே இப்போது.
அருகினிலே வருகின்றது –
அம்மரங்களின் தலையினில் ஏறிநின்று
அவள் உலகினை விளிக்கும் நாள்.
(c) karthikaneya@gmail.com
'அசையாநின்ற’
புகைப்படத்துக்கு பாவனை காட்டிய
மலையுச்சி மரங்களைச் சுற்றி
‘அசையாநின்ற’ மேகங்களையும்
பதிவு செய்த புகைப்படத்தில்
அசையாதே நின்ற மேகங்களில்
அக்கணத்தின்
அசைவில்லை அழகில்லை.
படம்பிடிக்காதிருந்திருந்தால்
என் நாட்களினிடையே
அலைந்தவாறிருந்திருக்கும்
அம்மேகக் கூட்டம் என
ஏங்கத் தொடங்கியபோது
அறை முழுதும்
தூறல் போடத் தொடங்கியிருந்தது
புகைப்படத்தினின்று
பைய வெளியேறியிருந்த மேகம்.