Saturday, July 17, 2010

நட்சத்திரக் கதைசொல்லி

அனுபவங்கள் எல்லாம்
ஆகாயத்தில் மின்னுவதாக
அறியாமல் சொல்லிவிட்டான் ஒருநாள் - என்
நச்சரிப்பு தாளாமல் பின்
நாளொரு கதை சொல்லத் தொடங்கினான்
நட்சத்திரக் கதைசொல்லி.
அதில் யாதொரு கதையும்
இடம்பெறவில்லையாம் இன்னும்
ஆகாய விண்மீன் கூட்டத்தில்.

(c) karthikaneya@gmail.com

விஷ முத்தம்

பேசத் துணியாத
பதங்களெல்லாம்
படிந்து தேங்கியுள்ளன
இதழ்களிலேயே.
உனைக் கொல்லும் விஷமாக
இனிக்கக்கூடும்
முதல் முத்தம்.

(c) karthikaneya@gmail.com

நெடுஞ்சாலை

எழுத மறந்த கவிதைகளை
இளங்காலைச் சாலைகளில்
இதமாய்த் தூவுகின்றன மரங்கள்.
நடை மறந்த வாழ்க்கையில்
பாசாங்கு செய்கிறேன்
படிக்க நேரம் இல்லாததாக.

(c) karthikaneya@gmail.com

இரை

குருணை அரிசியும்
கொறிக்க பாப்கார்னும்
குளிர்நீரும் வைத்தாலும்
பறந்து திரிந்து இரை தேடாமல்
பால்கனியில் எட்டிப்பார்ப்பதில்லை
இந்தச் சிட்டுக்குருவிகள் ஒருநாளும்.

(c) karthikaneya@gmail.com

மழையும் மழை சார்ந்த...

புதிய சொற்களைத் தாகித்து
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
அதற்காகத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,
'அன்றலர்ந்த...' என்பது போல்
அழுகிய சொற்களை வீசிவிட்டு
புத்தம் சொற்களை.

பழகிய பாடுபொருள்களைப் பழித்துவிட்டு
புதியவை எழுதிப் பார்க்க வேண்டும்.

யார் பழித்தால் என்ன,
எல்லார்க்கும் பொழியும் மழை
தந்துவிடக் கூடும்;
கவிதையை உயிர்ப்பிக்கும் சொற்களை.

இளமழை வந்தேவிட்டது
எதிர்பார்த்திருந்த வேளையில்.
சொற்கள் குறித்து மெதுவாகத் தொடங்குகையில்,
அதற்கென்ன தாகமோ தெரியவில்லை;
அள்ளிக் குடித்துச் சென்றே சென்று விட்டது
அந்தக் கவிதையை.

ஊர் ஊராகக் கொட்டித் தீர்க்கிறது
மழை இப்போது,
இன்னும் எழுதாத என் கவிதையை.

(c) karthikaneya@gmail.com