Monday, December 21, 2009

மரபுவழிக் கதைகள்

தீர்த்தக்கரைகளோடு
பேசிச் செல்லும்
தீராத கதைகளைக்
கடலில் சேர்க்கின்றன நதிகள்.
ஆதிநாள் முதல்
அவற்றைத்தான் ஓயாமல்
அலைகள் சொல்கின்றன
கரைகளுக்கு.
அதன்பிறகுதான்
குவியத் தொடங்கின
மணல்வெளியெங்கும்
மரபுவழிக் கதைகள் .
(C) karthikaneya@gmail.com

Thursday, December 10, 2009

மெய்ம்மையின் சங்கேதம்

மறுக்கப்படும் பகிர்தல்
மறதியின் மீதொளிரும் வண்ணப்பூச்சு
துயருறுவதாகக் காட்டும் பழம்மரபு
ஏளனப்புன்னகையின் முகமூடி
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
சமாதான உடன்படிக்கை
போர் தொடுக்கும் முன்னான முரசறைதல்
தன்முனைப்பற்ற சரணடைதல்
குரூர தண்டனையின் ஒப்பனை முகம்...
யாதொன்றின் சங்கேதமாகவும்
சில பொழுதுகளில் வெளிப்படும் -
'மன்னித்து விடு'

(C) karthikaneya@gmail.com

Wednesday, December 09, 2009

பொய் புனை பருவம்

வியந்துகொண்டே இருக்கத்தான்
மாறுகின்றன பருவங்கள்;
மழைக் காலங்களில்
மழை பார்த்தும்
மற்ற காலங்களில்
மழை குறித்தும்.

இலையுதிர் காலங்களைக் குறித்து
வியப்பதற்கு ஏதுமற்றிருந்தது
சிறு தூறலை அது
நினைவூட்டும் வரை

பருவங்கள் எல்லாம் இப்போது
பொய் புனைந்து
நடமாடத் தொடங்கிவிட்டன
மழைப் பைத்தியம் கொண்டு...

(C) karthikaneya@gmail.com