Wednesday, June 04, 2008

சுவரொட்டிகளை ஒட்ட சில சுவர்கள்

சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சியில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வியாபார நிறுவனங்களின் வாசல்கள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. சாலை விபத்துகள் நிகழ்வதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் எல்லா விதமான திரைப்படச் சுவரொட்டிகளைப் பற்றி கேட்பாரில்லை. விளம்பரப் பலகைகளை விடவும் அதிகம் கண்ணையும் கருத்தையும் கவர்பவை திரைப்படச் சுவரொட்டிகள் என்பதே எனது எண்ணம். தமிழ் நாட்டில் சில மாநகராட்சிகளில் பொது இடங்களில் ஆபாசச் சுவரொட்டிகள் ஒட்டப் படுவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இங்குள்ள நிலைமையையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எத்தகைய திரைப்படச் சுவரொட்டிகளும் பொது இடங்களிலும், பள்ளிகளின் அருகிலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் கூட ஒட்டப்பட்டுள்ளன. இவற்றால் சாலை விபத்துகளுக்கு மட்டுமல்ல மன விபத்துகளுக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. மக்களின் உயிரையும், உடல் நலத்தையும் காப்பது போல அவர்களின் மன ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இது போன்ற சுவரொட்டிகள் பொது இடங்களில் ஒட்டப் படுவதை நமது மாநகராட்சியிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் செய்திப் பலகை அமைத்திருப்பது போல செய்தி, விளம்பரச் சுவரொட்டிகளுக்கு என்று குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி அதற்கு என கட்டணமும் பெற்றால் நகரும் தூய்மை ஆகும். விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்தால் இரு வகையிலும் மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கூடுதல் வருவாய் கிட்டும். பல்வேறு விஷயங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளும் நெல்லை மாநகராட்சி இதையும் கவனித்தால் நமது நெல்லை வெள்ளையாக மாறிவிடுமே விரைவில்?

3 comments:

'))')) said...

நல்ல கருத்து. இதையெல்லாம் விட அரசியல் சுவரொட்டிகள் தான் தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் அதிகமா இருக்கின்றன. மாநகராட்சிகள் அரசியல் சுவரொட்டிகளை தடை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். போன மாதம் நெல்லையில் ஸ்டாலின் வருகிறார் என்று ஊரெல்லாம் ஸ்டாலினை வாழ்த்தி (காக்கா பிடித்து) சுவரொட்டிகளை ஒட்டி ஊரையே சீரழித்து விட்டனர். இதை எங்கே போய் முறையிடுவது?
அன்புடன்,
விஜய்

'))')) said...

Yes, I said about all the wall posters in that post, Vijay.

Anonymous said...

Karthi,

It occurs not only in Nellai but also in all places of Tamil Nadu.
The Government should take necessary steps to ban the cinema posters as well as political posters. I agree with Mr.Vijay's comments.