Saturday, August 02, 2008

இரயிலினுள் மழை.

மழைக்குப் பயந்து
கண்ணாடி ஜன்னலை
அடைத்த பிறகுதான்
அன்னை மடியிலிருந்து திரும்பி
அருகிருந்த என்னைப் பார்த்தான்.
இடமின்றி நின்றவாறு வந்த
எல்லோரையும் பார்த்தான்.
சாமான்களுக்கான மேலிருக்கைகளில்
அமர்ந்து வந்த சிலரை,
எதிர் இருக்கைப் பெண்ணின்
இளஞ் சிவப்பு நிற கைப்பையை,
என் துப்பட்டாவின் பூ வேலைப்பாட்டை,
முன்னும் பின்னும் அசைந்தவாறு படிக்கும்
மூன்றாம் இருக்கை மாணவியை,
அதை, இதை, எதையும் பார்த்தான்.
பார்வையாலும், வார்த்தையாலும்,
ஸ்பரிசத்தாலும், சிரிப்பாலும்
கண நேரத்தில் எல்லோரையும்
கவர்ந்து விட்டான் தனித்தனியே.
இறங்கும் நேரம் நெருங்க
எழுந்து நின்ற தாய் - எனக்கு
பறக்கும் முத்தம் ஒன்று
கொடுக்கச் சொன்னாள்.
கைகளில் நெடு நேரம் சேமித்த முத்தத்தைக்
கையோடே கொண்டு செல்வானோ என நினைத்தபோது
கைகளை விரித்தான்.
காற்றில் கலந்த முத்தம் என்
கன்னத்தைச் சேர்ந்தது.
கம்பார்ட்மெண்டில் எல்லோர்
கன்னங்களையும் தான்.
காற்றில் ஈரப்பதம் கூடி விட - அவன்
இறங்கிச் சென்றபின் பெய்யத் துவங்கியது
இரயிலினுள் மழை.



7 comments:

'))')) said...

அழகு.. :)

'))')) said...

Thank u, Muthulakshmi-Kayalvizhi. :)

'))')) said...

Literally Amazing :)

பாராட்ட வார்த்தைகளேயில்லை :)

Anonymous said...

கைகளில் நெடு நேரம் சேமித்த முத்தத்தை - cute image. :)

'))')) said...

Vijjinna, Ithellam over feeling.Anyway thank u for encouraging me often.

'))')) said...

Awesome!

It could be a short film!

'))')) said...

wow karthi nee enkeyo poitte.