Saturday, November 15, 2008

அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்

தோள்களிலே எனைத் தூக்கி
'உப்புமூட்டை' என்றவர்கள்

சலிக்காமல் நாள்தோறும்
பல கதைகள் சொன்னவர்கள்

விளையாட்டில் வலிந்து சேர்த்து
தோற்கடித்துச் சிரித்தவர்கள்

முகம் சிவந்து அழுதபோது
முத்தமிட்டுத் தணித்தவர்கள்

கடற்கரையில் கைப்பிடித்து
அலையாடிக் கழித்தவர்கள்

ஏனென்றே தெரியாமல்
'யானை-பானை' என்றெல்லாம்

செல்லப் பெயரிட்டுச்
சீண்டி ரசித்தவர்கள்

இப்போது இயற்பெயரால் கூட
அழைப்பதில்லை என்னை.

என்ன செய்யக்கூடும்?
அண்ணன்களாகிவிட்டார்கள்
என் அண்ணன்கள்.

8 comments:

'))')) said...

அவர்கள் வளர்ந்து விடுகிறார்களே..... எல்லாம் சிறிது காலத்திற்கு. அவர்கள் இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் மீண்டும் உங்களுடன் நெருங்கிவிடுவார்கள். ஆனால் அப்போது நீங்கள் அவர்களுக்கு குழந்தையாகிவிடுவீர்கள்

'))')) said...

\\என்ன செய்யக்கூடும்?
அண்ணன்களாகிவிட்டார்கள்
என் அண்ணன்கள்.\\

கார்த்திகா,
மற்ற வரிகள் எல்லாம் நல்லா இருக்கு.
இதற்கு என்ன அர்த்தம். புரியலையே!!

Anonymous said...

உணர்வுகள் புரிந்துக் கொள்ள முடிகிறது...சிறு பிள்ளையாகவே இருந்து விட தோன்றுகிறது :-)

'))')) said...

என்ன செய்வது
காலம், அண்ணன்களையெல்லாம் அண்ணன்களாக்கி விடுகிறது.

நேயமுகில் - மிக அழகான பெயர்.
உங்களின் கவிதைகளைப் போலவே

'))')) said...

ஆம் நேயமுகில் - அண்ணன்கள் அண்ணன்களாக ஆக வேண்டிய நிலைக்குக் காலம் தள்ளுகிறது. காலத்தின் கோலம் அது.

தோழமை உணர்வு மாறி, பாசமுள்ள உறவாக மாறுவதும் மகிழ்ச்சி தானே !

கவிதை அருமை - எளிய சொற்கள் - இயல்பு நடை - உப்பு மூட்டை தூக்கி, கதைகள் சொல்லி, வலிந்து தோற்கடித்து, முத்தமிட்டு, அலையாடி, சீண்டிப் பழகியவர்கள் இப்போது மாறி விட்டார்களே !! என்ன செய்வட்து ?

நல்வாழ்த்துகள்

'))')) said...

kadisai vari...

"aNNangalagivitta ANNangal"

atharkkku bathil

"aNNiyargalagivitta aNNangal" ippadi irunthal nalla irukkum..

'))')) said...

அண்ணிகள் வந்துவிட்டார்களோ???

அண்ணன்கள் மட்டுமில்லை, கல்யாணமாயிட்டா தம்பிகளும் இப்படித்தான் :(

கவிதை அழகாயிருக்கிறது.

'))')) said...

//விளையாட்டில் வலிந்து சேர்த்து
தோற்கடித்துச் சிரித்தவர்கள்

முகம் சிவந்து அழுதபோது
முத்தமிட்டுத் தணித்தவர்கள்//
மிகவும் கவர்ந்த வரிகள்