Tuesday, May 04, 2010

அந்நிய நிழல்

மேஜை விளக்கின்
மென் நிலவொளியில்
பைத்தியமாயிருக்க சில குறிப்புகளை
வாசித்துக் கொண்டிருந்தேன்
ஒரு முன்னிரவில்.

ஓரிரு குறிப்புகள்
ஒத்திருந்தன என்னோடு.

மின்சாரம் மெதுவாக
விடைபெற்றுச் சென்றபின்
மெழுகுவர்த்தி ஒளியில்
வாசித்து முடித்தேன்
மேலும் சில குறிப்புகள்.

சுவடின்றி அறைமுழுதும்
சூழ்ந்துவிட்ட நிலவொளி போல்
பயம் நுழைந்தது
மிக மெல்ல மனதில்.

வெறிகொண்டாற்போல்
துணிகளைக் கலைத்துப் போட்டு
மடித்து வைத்தேன்.

வெட்கம் கெட்டு
கொஞ்ச நேரம்
அழுது தீர்த்தேன்.

தயக்கம் துறந்து - நாம்
பகிர்ந்து கொண்ட தருணத்தை
நினைவடுக்கில் மெதுவாகப்
புரட்ட முயன்றேன்.
நம் ஆயுளின் வெட்கமெல்லாம்
குறுக்கிட்டு நின்றது அங்கே.

ஒரு பகிர்தல் நம்மை
அந்நியமாக்கிவிட்டது
வினோதம்தான்

திரைச்சீலை மெதுவாக
உயர்ந்து தாழ்கிறது
சுவரில் என் சாயை
படிந்து எழுந்து படிகிறது

நிழலுக்கும் தனியே
ஓர் உயிர் உண்டு என்று
நம்பியிருக்கவில்லை
நான் இதுவரை.

இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஒரு பைத்தியத்தின் குறிப்புகளை...

(C) karthikaneya@gmail.com