Wednesday, April 29, 2009

தீராத் தேடல்

ஒரு முகம் தேடி
ஓயாமல் அலைகிறது
கோடைகள் தோறும் வெயில்.

இன்றும் கூட - ஒரு
தென்னங்கீற்றின்
முன் தின மழைத் துளியில்
தொடங்கிய பயணத்தில்
முன்பகலில் இளைப்பாறிக்கொண்டிருந்தது
மூங்கில் இலை நுனியில் - பின்
மெல்ல உருகத் தொடங்கியது - ஒரு
குயிலின் கானம்.

குரலின் முகம் தேடி
தகித்து எரித்து
அலைந்து களைத்து
உறங்கத் தொடங்கிய வெயிலின்
உறங்கா கேள்வி:
'அத்துவானக் காட்டில்
யாருக்கிந்த தாலாட்டு?'

கோடைகள் முடிந்தாலும் - இந்தக்
குயில்களுக்கு ஓய்வில்லை
நீ அறியாயோ வெண்வெயிலே!

(C) karthikaneya@gmail.com

Saturday, April 25, 2009

மிச்சமிருக்கும் பரஸ்பரமல்லாத ஒன்று

புறக்கணிப்புகளின் காயங்களைப்
புன்னகையின் பின்னால்
ஒளித்துக் கொண்டேன்.
கண்ணீர்த் துளிகளுக்குத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்
ஓர் இடம் - பின்
தீர்மானித்துக் கொண்டேன்
எதிர்ப்படும் ஒரு மழை நாளில்
தடயங்களின்றித்
தொலைத்துவிட வேண்டுமென்று.

பின்னொரு நாள் வந்தது
அந்த மழை நாள்
உன்னை எதிர்நோக்கியிருந்த
மழை நாட்கள்
இத்தனை கடுமையில்லை என
துக்கித்தவாறு.

திரட்டிச் சென்ற
கண்ணீர்த் துளிகளைக்
கரைத்த மழையில்
நனைந்தோ நனையாமலோ
வீடு திரும்பி
தலை துவட்டிக் கொண்டேன்.

தும்மல் எழுந்தது
என்னை நினைத்திருக்க
வாய்ப்பேயில்லாத
உன்னை
நினைவூட்டியவாறு.

(C) karthikaneya@gmail.com

முள்ளின் மனம்

வேடிக்கையான
விளையாட்டுப் பொருளானது
என் கைக்கடிகாரம்
குழந்தைக்கு.

காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு.

வருத்தப்படாதவாறுதான் - அதைத்
திருப்பி வாங்கிக்
கட்டிக்கொண்டு வந்தேன்.

வருத்தமில்லையென்று
யார் சொன்னது என்றது
ஓடாமல் நின்ற கடிகார முள்.

பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.

(C) karthikaneya@gmail.com

Thursday, April 09, 2009

வேரின் வெளி

ஒரு தொட்டிச் செடியின் வேராக
உன்னுள் சிறைப்படுவேன் - நீயோ
உன் ஆகாய வெளியாக
உணர்கின்றாய் என்னை.

(C) karthikaneya@gmail.com

Monday, April 06, 2009

இரவைத் தின்ற வார்த்தைகள்

இரவு ரயில் பயணமொன்றில்
பேச்சினிலே பேரார்வமென்று
அந்நிய மொழியில் அறிமுகமானான்
எதிர் இருக்கை சிநேகிதன்.
'டாவின்சி கோட்
இந்திய இலக்கியங்கள்
இரவு உணவு
சென்னை ஆட்டோக்கள்
தமிழகத் தந்தை
ஜெர்மன் தாய்
இங்கிலாந்து கல்வி'
இன்னும் ஏதேதோ
ஆல்கஹால் மணம் - என்
விழிகளில் பரவப் பேசிவிட்டு
உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.
உறக்கத்தின் ஊடே - ஏதோ
உணர்வு தீண்ட
திடுக்கிட்டு விழித்தேன்.
ஒருக்களித்துப் படுத்து
உற்றுப் பார்த்திருந்தவன்
விழிகளில் சந்தித்து
'டோன்ட் வொர்ரி' - என
வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.
(C) karthikaneya@gmail.com

நானும் அழகாய்த்தான் இருந்திருப்பேன்

பத்திரப்படுத்தி வைத்த - என்
பழைய உடைகளை அணிந்தது
புதிய வரவான குழந்தை.
தொட்டிலில் கிடந்த என்னை
எட்டி நின்று நான்
பார்ப்பது போலிருந்தது.

(C) karthikaneya@gmail.com

கல்யாணத் தெரு

அணில்கள் விளையாடும்
ஆகாவழி மரம் ஒன்றும்
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும்
அரளிச் செடி ஒன்றும்
அருகருகே வளர்ந்தன
புதிதாய் வந்த தெருவில்.
ஆச்சரியப்படும் வேகத்தில்
அரளிச் செடி வளர்ந்து
அந்த மரத்தின் கையை
எட்டிப்பிடித்த நாளில்தான்
எரியத் துவங்கியது தெருவிளக்கு.
கல்யாணத் தெரு போல்
களைகட்டி விட்டது இப்போது
மஞ்சள் வெளிச்சத்தில்
நனையும் தெரு.

(C) karthikaneya@gmail.com

குற்றவாளியின் சாயல்

உன் சிநேகம் கிடைத்தது
நான் எதிர்பாரா வேகத்தில்.
ஏற்றுக்கொள்ளத் தயங்குமளவு
இருந்தது உன் நேசம்.
எல்லாவற்றுக்கும் காரணம்
என் பெயரில் இருந்த
உன் காதலனின் சாயல்.
பின்னொரு நாள்
என் தோள்களில் சிந்திய
கண்ணீர்த் துளிகளால்
உன் காதலின் பிரிவைக் கூறினாய்.
அன்றிலிருந்து
உன் நேர்ப்பார்வை அஞ்சி
விலகிச் செல்கிறேன்.
தடயங்கள் ஏதுமற்ற காதலுக்கு
மௌன சாட்சியாக மாறியபின்
இப்போதெல்லாம் - யாரிடம்
என் பெயர் கூறும்போதும்
தொனிக்கிறது - ஒரு
குற்றவாளியின் சாயல்.

(C) karthikaneya@gmail.com

ஏதோ ஒரு பொழுது...

மழைத்துளி போல் சீராக
மரங்களின் இலைகள் சிந்த
கதவிடுக்கில் வழிவதுபோல்
காற்று மெல்ல கசிந்து வீச
அதுவரை யாரும்
அறிந்திராத சாயலில்
மஞ்சள் வெளிச்சம்
எங்கும் பரவ
மாலையோ காலையோ என
மனம் மயங்கிய பொழுதொன்றில்
மேலெழும்பி வந்து கொண்டிருந்தது
மேற்கினின்று சூரியன்.
(C) karthikaneya@gmail.com